வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீரென பல ஆசிரிய மாணவர்கள் ஒரே நேரத்தில் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து, சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை மேற்கொண்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக திடீர் வாந்தி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகளால் ஆசிரிய மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, ஒரே வகையில் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய சுகாதார குழு கல்லூரியில் விரிவான சோதனைகளை மேற்கொண்டது.
சோதனையின் போது குடிநீர் தரம் பரிசோதிக்கப்பட்டதுடன், கல்லூரியில் வழங்கப்படும் உணவின் தரத்தையும் சுகாதாரப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தியது. மேலும், சுகாதார சீர்கேடு காணப்பட்ட பகுதிகளை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றதற்கான காரணம் இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அண்மையில் சுமார் 40 ஆசிரிய மாணவர்கள் திடீரென சுகயீனமடைந்திருந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.








