2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை திறைசேரியின் மின்னஞ்சல் அமைப்பில் ஊடுருவி, அவுஸ்திரேலிய கடன் செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் கொள்ளை அடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அரசாங்கம், பல மாதங்களுக்குப் பிறகே இதைக் கண்டறிந்துள்ளதோடு, மார்ச் மாதம் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மின்னஞ்சலை ஹேக் செய்தவர்கள் விபரம், பணத்தை மீட்க முடியுமா என்ற விபரம், உடனடியாக இந்த விடயம் கவனிக்கப்படாமல் போனமை தொடர்பாக இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஹேக்கர்கள் திறைசேரி கணினி அமைப்பிற்குள் நுழைந்து, அவுஸ்திரேலியக் கடன் பட்டோருக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையின் விவரங்களை மாற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்துவதற்குப் பதிலாக, அந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களிடம் சென்றுள்ளது.
இந்த நிலையில் இலங்கை, இந்தியாவிற்குப் பணம் அனுப்ப முயன்றபோது, இதேபோன்ற ஒரு ஹேக்கிங் முயற்சி கண்டறியப்பட்டதன் பின்னரே குறித்த கொள்ளை சம்பவம் தெரியவந்துள்ளது.
பல மாதங்களாக ஹேக்கர்கள் பணத்தை கொள்ளையடித்த விடயத்தில் மத்திய வங்கி மற்றும் உரிய அதிகாரிகள் மீது பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.








