இலங்கை காவல்துறையின் பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள், இன்று காலை (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
குறித்த வாகனங்களுக்கான இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வாகனங்கள் வட மாகாண காவல் நிலையங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன.
இதன்போது எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகள் வழங்கப்படும் என இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த அன்பளிப்பை பாராட்டும் விதமாக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கு ஒரு நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வத்தகல, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, டிஐஎம்ஓ-வின் பொது மேலாளர் ரஜீவ் பண்டிதகே, இந்திய உயர் ஸ்தானிகர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.








