காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேருந்துகளில் இருந்த 63 பயணிகள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோக சம்பவம் ஒன்று நேற்று(12) காலை இடம்பெற்றுள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை வழியாக இரண்டு பேருந்துகள் (ஏஞ்சல் மற்றும் கணபதி டீலக்ஸ்) காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை திடீரென பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து இரண்டு பேருந்துகளும் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
முன்னாள் சென்ற பேருந்தில் 24 பேரும், பின்னால் சென்ற பேருந்தில் 41 பேரும் பயணித்துள்ளனர்.
இதற்கிடையே கணபதி டீலக்ஸ் பஸ்சில் இருந்த பயணிகளில் இரண்டு பேர், அந்த பஸ்சில் இருந்து கீழே குதித்தனர். மற்ற அனைவரும் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
மொத்தம் 63 பயணிகளும் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சித்வான் மாவட்ட ஆட்சியர் இந்திரதேவ் யாதவ் கூறுகையில், ‘இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் உட்பட 63 பேர் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகிறது. இருந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை படையுடன் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து பேருந்து மற்றும் இறந்த பயணிகளை மீட்கும் பணியில் களமிறங்கி உள்ளனர்’ என்று கூறினார். இந்த கோர சம்பவம் குறித்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் வெளியிட்ட பதிவில், ‘நாராயண்கர்-முகலின் சாலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும் வெள்ளம் காரணமாக பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் காணாமல் போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். விபத்தில் சிக்கிய பயணிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்வும் தெரிவித்துள்ளார்.








