பப்புவா நியூ கினியாவின் வடக்கில் உள்ள மூன்று தொலைதூர கிராமங்களில் குறைந்தது 26 பேர் கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிழக்கு செபிக் மாகாண பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ் பாகன் தெரிவிக்கையில் “இது மிகவும் பயங்கரமான விடயம் – நான் அந்தப் பகுதியை அணுகியபோது, குழந்தைகள், ஆண்கள், பெண்கள் இருப்பதைக் கண்டேன் என தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் 30 இளைஞர்களைக் கொண்ட குழுவால் கொல்லப்பட்டனர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள கிராமவாசிகள் ஒரு பொலிஸ் நிலையதில் தஞ்சம் அடைந்ததாகவும், குற்றவாளிகளின் பெயரைக் கூற மிகவும் பயந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தியவர்கள் மறைந்துள்ளனர், இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜூலை 16 மற்றும் ஜூலை 18 ஆகிய திகதிகளில் தாக்குதல்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் வோல்கர் டர்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் 16 குழந்தைகள் உட்பட குறைந்தது 26 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை உள்ளூர் அதிகாரிகள் தேடுவதால், இந்த எண்ணிக்கை 50க்கு மேல் உயரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 200க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறியதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







