ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதியை செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலதிகமாக செலவிடுவதற்காக பொது மக்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோருவதாக போலியான விளம்பரம் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
விளம்பரத்துடன் இணைப்பை திறப்பதை தவிர்க்குமாறு அதன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விளம்பரங்கள் இணைய மோசடிகள் எனவும் இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் ஏனையோர் அறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








