லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த நிலையில் அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனானின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பலர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
60 வீடுகள் மற்றும் கடைகளில் தீயும் பரவியுள்ளது.
இந்த சம்பவத்தில் 15 மகிழுந்துகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட உந்துருளிகளும் தீப்பிடித்துக் கொண்டன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








