சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25இலட்சம் ரூபாய் பெறுமதியான 16பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்தனர்.

கணவன், மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் கடந்த (15.10) செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்திருந்தனர்.

அத்தோடு உருக்கப்பட்ட நிலையில் நகைகளும், திருட்டுச் சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து நகை விற்ற 7இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here