ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டில் எட்வின் ஷால்க்கை இன்று (25) முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் போது, தூதுவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை முன்வைத்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் சமாதானம் மற்றும் தேசிய நல்லிணக்க மாதிரியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஊடாக சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பயண மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மனித-யானை மோதல் மேலாண்மைக்கு தீர்வு காண தென்னாப்பிரிக்காவின் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கையின் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பதில் தென்னாபிரிக்காவின் ஆர்வம், இந்தப் பகுதிகளில் நெருக்கமாகச் செயல்படுவதற்கான அர்ப்பணிப்புடன் சிறப்பிக்கப்பட்டது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
இந்த முயற்சிகள், சமீபத்திய பயண ஆலோசனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்த வழிவகுத்தது என்று அவர் உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி ரெனே எவர்சன்-வார்னி மற்றும் இரண்டாவது செயலாளர் திருமதி சனெதெம்பா-லீலா ஷாங்கேலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.






