வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருவதாக வெளியுலகுக்கு நம்ப வைத்துக்கொண்டு , இரவு வேளைகளில் மனைவி பிள்ளைகளை சந்திக்கச் சென்ற நிலையில் தகவல் அறிந்து பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், ஈடுபட்டு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெரும் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடந்த ஜூலை மாதம் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , அவருடன் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மற்றொரு நபரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை பொலிஸார் அறிந்து , மற்றைய நபரை கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் , அவரது மனைவி பிள்ளைகள் அவரை பிரிந்து கொக்குவில் பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் பிரதான சந்தேகநபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்வதாக வெளியுலகத்திற்கு நம்ப வைத்துவிட்டு, இரவு வேளைகளில் மனைவி பிள்ளைகளை பார்க்க வந்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் கொக்குவிலில் உள்ள வீட்டினை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு பிடியாணை பிறப்பித்துள்ளது.

அதேவேளை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒரு கோடியே 29 இலட்ச ரூபாய் மோசடி வழக்கிலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக குறித்த பிரதான சந்தேக நபருக்கு எதிராக வவுனியா , யாழ்ப்பாணம் மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில் 3 கோடியே 50 இலட்ச ரூபாய்க்கு அதிமான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து குறித்த பிரதான சந்தேகநபரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுளளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here