சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளில் குறித்த நாடுகளுக்கு எதிராக புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமுல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஃபெண்டானில் (Fentanyl) எனப்படும் செயற்கை ஓபியாய்டு (Opioid) வலி நிவாரணி அமெரிக்காவுக்குக் கடத்தப்படுவதை அந்த நாட்டு அரசாங்கம் தடுக்கும் வரையில் சீனா மீது மேலதிகமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








