வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சீனா, வடக்கிலே என்ன அர்த்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இன்று (05/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகம் தான் அதிகளவில் வாழ்ந்து வருகிறது. போர் காலத்திலும் சரி தற்போதும் சரி மிக பின்னோக்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளின் கல்வி நிலைமை வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய இழுபை் படகு பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவை மீறி இன்னொரு நாடு மூக்கை நுழைப்பதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.








