வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவினர் வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல் நடாத்தி அட்டகாசம். பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிய  சம்பவம் செவ்வாய்க்கிழமை (15/04/2025) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோத காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர்சைக்கிளில் அவரின் வீட்டை தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக் கொண்ட போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிஓடி அருகிலுள்ள அவரது மாமனார் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதுடன் சது மற்றும் அவரது மாமியார் படுகாயடைந்ததையடுத்து அவர்கள் தாக்குதல் மேற்கொள்ள சென்ற சிறைச்சாலை உத்தியோகத்ரை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிசாருக்கு அறிவித்தனர்.

இந்த நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார்சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதனையடுத்து அங்கு சென்ற பொலிசார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன் தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த வாள்வெட்டு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியவர் என ஒருவரின் வீட்டுக்கு வாள்களுடன் சென்று அவர்மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்ந்து பிரதேசத்தில் செய்துவரும் அட்டூழியத்தையடுத்து மக்கள் பயப் பீதியில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here