2026 வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுகொள்வதற்காக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை இன்று (29) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மாவட்ட மட்டத்தில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் மக்களின் ஏனைய அவசர அபிவிருத்தித் தேவைகள் மற்றும் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரசல் அபோன்சு, அரச நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ. ரத்னசீல, தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். அனோமா நந்தனி உள்ளிட்டவர்களுடன் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.








