தெற்கு இத்தாலியில் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பதினொரு அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதனை, ஜேர்மன் தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு படகு ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருந்த படகிலிருந்து 51 பேரை மீட்டதோடு, அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட கப்பலின் கீழ் தளத்தில் 10 உடல்கள் சிக்கியிருந்ததாக ஜேர்மன் உதவிக் குழுவான RESQSHIP தெரிவித்துள்ளது.
இவ் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு திங்கட்கிழமை காலை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த படகில் சிரியா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு லிபியாவில் இருந்து படகு சென்றுள்ளது.
இதேவேளை, இத்தாலியின் கலாப்ரியாவில் இருந்து கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் துருக்கியில் இருந்து புறப்பட்ட இரண்டாவது படகு தீப்பிடித்து கவிழ்ந்துள்ளது.
அந்த படகிலிருந்த 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர்.
இதில் 11 பேர் இத்தாலிய கடலோர காவல்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டாவது படகில் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகதிகள் சென்றுள்ளனர்.
மத்திய தரைக்கடல் உலகின் மிக ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.