January 23, 2026
மர்மங்களை வெளிக்கொணரும் ‘பெனிகோ’: பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொல்லியல் நகரம்!
Technology World News புதிய செய்திகள்

மர்மங்களை வெளிக்கொணரும் ‘பெனிகோ’: பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொல்லியல் நகரம்!

Jul 7, 2025

பெருவின் வடக்குப் பகுதியில் உள்ள பரங்கா மாகாணத்தில் (Barranca) புதிய தொல்லியல் நகர மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஆய்வாளர்கள் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளின் அடிப்படையில், இது ஒரு மலை மேட்டின் மீது அமைந்த சுற்றளவு வடிவ நகரமாக இருக்கின்றது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் (1,970 அடி) உயரத்தில் கட்டப்பட்ட கல் மற்றும் மண் கட்டிடங்களின் இடிபாடுகளுடன் காணப்படுகிறது.

இந்த நகரத்திற்கு பெனிகோ (Peñico) என்ற பெயர் கூறப்படுகின்ற நிலையில், இது கிமு 1800 முதல் 1500 ஆண்டுகளுக்கிடையே உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடம், அமெரிக்காவின் மிகவும் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் கரால் நாகரிகம் (Caral civilization) தோன்றிய இடத்திற்கு அருகிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கரால் நாகரிகம், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு நாகரிகமாகும். இதில் 32 பெரிய கட்டட அமைப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இது எகிப்து, இந்தியா, சுமேரியா மற்றும் சீனாவின் தொன்ம நாகரிகங்களுக்கு இணையாக இருந்தாலும், முழுமையாக தனிமையில் வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கரால் நாகரிகம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், அதன் பின்னடைவை அடிப்படையாகக் கொண்டு உருவான நகரமாக பெனிகோ இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். இந்த இடம் கடற்கரை, மலையகம் மற்றும் வனப்பகுதிகளுடன் பரிமாற்றம் செய்ய உகந்த இடமாக இருந்திருக்கலாம்” என பெனிகோவை ஆராய்ந்த தொல்லியல் நிபுணர் ரூத் ஷாடி (Ruth Shady) கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி பெரு கலாச்சார அமைச்சின் துணைஆராய்ச்சியாளரான மார்கோ மகசுகுவாய் (Marco Machacuay),

“பெனிகோ, கரால் நாகரிகத்தின் தொடர்ச்சியாகத் திகழ்கின்றது. இது ஒரு புதிய வரலாற்றுப் புரிதலை உருவாக்குகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

8 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னணியில், இந்நகரில் 18 கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பூஜை நெறிமுறைகளுக்கான கோவில்கள் மற்றும் குடியிருப்புகள் அடங்குகின்றன.

மையப் பள்ளத்தின் சுவர்களில் சிற்பக் கலையை பிரதிபலிக்கும் நிவாரண (relief) வேலைப்பாடுகள், மற்றும் ‘புடுடு’ (pututu) எனப்படும் சிப்பிக்குழலின் ஒவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குழல் நீண்ட தூரத்துக்கு ஒலி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், மற்ற கட்டிடங்களில் மண்ணால் செய்யப்பட்ட மனித மற்றும் விலங்கு சிலைகள், புனிதப் பொருட்கள், மற்றும் மணிகள் மற்றும் சிப்பிகளால் செய்யப்பட்ட தொட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெரு நாடு, தொன்மக் கலாச்சாரங்களின் பூர்வீகமாக திகழ்கிறது. உலகப்புகழ் பெற்ற மாசு பிச்சு (Machu Picchu) மற்றும் மர்ம மயமான நாஸ்கா கோடுகள் (Nazca lines) போன்ற தொல்லியல் இடங்களுடன் இப்போது பெனிகோ நகரமும் வரலாற்றுப் பக்கங்களில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *