
வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பிரதான வீதியில் தனது மகனின் வியாபார நிலையத்திற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் வசித்து வரும் தம்பதியினரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்தச் சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் என்ற வயோதிபரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் இரத்தங்களுடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.