ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இன்று (20.08) தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் 3 வகையாக இருப்பதாகவும், அதில் கிளேட் 1 பி வகைமை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 14 ஆம் திகதி அன்று உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்திருந்தது.

இன்று வரை, 12 ஆபிரிக்க ஒன்றிய உறுப்பு நாடுகளில் 3101 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு, 15,636 பேர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனையில் இருப்பதாகவும், அதில் 548 பேர் உயிரிழந்து இறப்பு விகிதம் 2.89% பதிவானதாகவும் ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரத்தில் ஆப்ரிக்காவுக்கு வெளியே சுவீடன் மற்றும் பாகிஸ்தானில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசரக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என்றும், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மற்ற வகை வைரஸ்கள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் கிளேட் 1 பி வகைமை உடல் முழுவதும் தோல் வெடிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here