சின்னம்மை நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயைத் தடுக்க உதவும் தடுப்பூசி தற்போது வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சில தனியார் வைத்தியசாலைகளின் அறிக்கைகளின் படி தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் விலை 7,500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாய் வரை உள்ளது.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி இல்லை.
கடந்த சில வாரங்களாக கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் தடுப்பூசி பெற்றுள்ளதாக பல தனியார் வைத்தியசாலை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
சின்னம்மை என்பது வாரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் மூலம் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இது முக்கியமாக தடுப்பூசி போடாத சின்னம்மை உள்ள நபர்களிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்படாத மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களில் 90% வரை பாதிக்கப்படலாம்.
இந்த நோய் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சின்னம்மை காரணமாக குழந்தைகள் வழக்கமாக ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பாடசாலை அல்லது குழந்தை பராமரிப்பு நிலையங்களுக்கு செல்வதில்லை.
சின்னம்மை நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி போடுவதுதான் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்னம்மை அல்லது தடுப்பூசி போடாத குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் சின்னம்மை தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரும்பாலானவர்களுக்கு நோய் வராது, என்று கூறப்படுகிறது.
சின்னம்மை பொதுவாக லேசானதாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள், 12 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகள், பதின்வயதினர், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.








