அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்தவற்றில் மிகவும் வெற்றிகரமானதாக இருந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்கும் வாய்ப்பு இந்தச் சந்திப்பின் மூலம் கிடைத்ததாகவும், ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா – உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையிலான இச்சந்திப்பு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. மேலும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர், பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்சு ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







