ஆசிரியர் ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை காவல்துறையினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.
மாத்தளை மாவட்ட பாடசாலையில் கல்வி கற்கும் நடன ஆசிரியர் ஒருவரின் புகைப்படத்தைக் கணினி மூலம் ஆபாச படமாக மாற்றம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அதே பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை நகரிலுள்ள பிரதான கலவன் பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர்கள் மாத்தளை ஹுலங்கமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தை சேர்ந்த குறித்த ஆசிரியை, ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளை கல்லூரி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
தனது புகைப்படம் ஒன்றிலிருந்து முகத்தை வெட்டியெடுத்து நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் இணைத்து முகநூலில் வெளியிட்டுள்ளதாக குறித்த ஆசிரியை மாத்தளை காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் அவ்விரு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து காவலில் வைக்கப்பட்ட குறித்த இரு மாணவர்களும் மாத்தளை நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







