அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் வாகன சோதனைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காட்சிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால நிகழ்வுகளை கொண்ட குறித்த காணொளிகள் தற்போது நடைபெறுவதுபோன்று தவறாக சித்தரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற, பிழையான காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.
அத்தோடு, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








