2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும்.
அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும்,
மேலும் 25 நிர்வாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி பிரிவுகளில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 5783 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.
49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில், இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்படுகிறது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முன்னதாக இடம்பெற்றிருந்ததுடன், வழக்கொன்றின் காரணமாக கல்முனை மாநகர சபைக்கான தேர்தலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாகக் கொழும்பு மாநகர சபை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 3 இலட்சத்து 94, 533 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
அத்துடன், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக ஹப்புத்தலை நகர சபை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு 3,051 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதனிடையே, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4,450 பேர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








