ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மோதர நிபுனின் சகோதரர் மோதர சத்துர மற்றும் புளூமெண்டல் சங்க எனப்படும் நபர் ஆகிய இருவரும் நேற்று (13) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தங்கியிருந்த இருவரையும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
குறித்த இருவரும் நாட்டிலிருந்து தப்பிச் சென்று அபுதாபியில் மறைந்திருந்த காலத்தில், மத்திய கிழக்கு போரில் ஈரான் தாக்குதல்களுக்கு பயன்படுத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள், காணொளி காட்சிகளை தமது கைபேசிகளில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இருவரும் விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின் மோதர சத்துர கொழும்பு, நாரஹேன்பிட்ட மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புளூமெண்டல் சங்க, விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








