செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் காலப்பகுதியில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில், ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இலங்கை பொலிஸார் நிலைநிறுத்துவார்கள்.
மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 300 போலீசார் நியமிக்கப்படுவார்கள்.
போக்குவரத்துத் திட்டம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமலில் இருக்கும்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள்:
ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியில் ஆயுர்வேத சந்தியிலிருந்து ராஜகிரிய சந்தி வரையிலான வெளியேறும் பாதை முற்றாக கட்டுப்படுத்தப்படும்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியை பொல்துவ சந்தியில் இருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையில் அத்தியாவசிய தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்காலப்பகுதியில் தேவையின்றி கோட்டா வீதி, ஆயுர்வேத சந்தி, மற்றும் பழைய கோட்டே வீதி இராஜகிரிய சந்தியிலிருந்து பொரளை சந்தி வரை செல்வதை தவிர்க்கவும்.
வாகன நெரிசல் காரணமாக பயண சிரமங்களை எதிர்நோக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள், 0718 591 741 அல்லது 0112 433 333 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுக்க முடியும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








