தொடருந்து திணைக்களம் ஊடாக இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகளில் சில அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வெளியானதன் காரணத்தினால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெறுவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் பயணச்சீட்டு முறைகேடு தொடர்பில் தொடருந்து திணைக்களம் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் எனக் குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் தெரிவித்துள்ளது.








