மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று புதன்கிழமை (19/03/2025) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது.
நேற்று புதன்கிழமை (19/03/2025) அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் ஆகியோர் குறித்த வயல் பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குறித்த யானை தொடர்ச்சியாக நெற்பயிரை சேதப்படுத்தி வந்ததாகவும் தெரிய வருகிறது.


மீட்கப்பட்ட யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் சடல சோதனைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விவசாய காணியின் உரிமையாளர் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்]







