உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் இயக்குநர் பிலிப் வார்டு அவர்கள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில், 2023–2027 காலப்பகுதிக்கான உலக உணவுத் திட்டத்தின் மூலோபாயத் திட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
உலக உணவுத் திட்டத்தின் சார்பில் அரசாங்க நட்புறவு அதிகாரி முஸ்தபா நிஹ்மத் அவர்களும் கலந்துகொண்டார்.
சந்திப்பின் போது, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் மற்றும் உள்நாட்டு உணவுப் பொருட்களுக்கு சரியான சந்தையை உருவாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய பிலிப் வார்டு வழங்கி வரும் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
1968 முதல் இலங்கையில் செயல்பட்டு வரும் உலக உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்து நிலைத்தன்மையையும் மேம்படுத்த பல தேசிய முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.








