உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (31.05.2025) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, கடந்த மே 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வௌியிடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here