மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகங்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை,மண்முனை வடக்கு மற்றும் கிரான் போன்ற பிரதேசங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

மேலும் சிறுவர் உரிமை மீறல் துஷ்பிரயோகம் இடம்பெறும் போது சமூகமானது பார்வையாளராக செயற்படாது உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு சட்டத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றது எனவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here