கொட்டகலை நகரத்தில் கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தலவாக்கலை மற்றும் நோர்டன் பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 11 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
திம்புள்ளை,பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றியுள்ள நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குழு நேற்று (18) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. அங்கு நீதவான் அனைவரையும் எதிர்வரும் ஜூன் 22 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சம்பவத்தில் எந்தவித சேதமோ உயிரிழப்போ பதிவாகவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை திம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








