நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும், சஜித் பிரேமதாச அதனை ஏற்காது ஓடி ஒளிந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீட்டைக் கட்டுவதைப் போல படிப்படையாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ரூபாய் வலுவடைந்ததால் பொருட்களின் விலைகள் குறையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று(01.09) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை நிலவியதால் இந்தக் கூட்டதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அறிவித்த போதிலும், மக்கள் தனக்காக மழையில் நனைந்துகொண்டு காத்திருப்பதாக கூறி, அந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கெடுத்திருந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வவுனியாவில் ஆரம்பித்து கெகிராவ, சிலாபம் ஆகிய கூட்டங்களை முடித்துவிட்டு தொம்பே வந்ததால் தாமதமாகிவிட்டது. அதனால் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மக்கள் மழையில் நனைந்துகொண்டு காத்திருந்தீர்கள்.

நீங்கள் நோய்வாய்ப்பட்டால் செப்டம்ர் 21 வாக்களிக்க முடியாமல் போகும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார். ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை. ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன்.

முடக்க வந்தவர்களை இராணுவத்தை கொண்டு தடுத்தோம். மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைப்பேன். அனுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக சொல்கிறார்கள்.

கோட்டாய ராஜபக்‌ஷ செய்ததையே அவர்களும் செய்யப்பார்க்கின்றனர். இளையோருக்கு நான்கு வருடங்கள் தொழில் கிடைக்கவில்லை. அரச, தனியார் துறைகளில் அவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வழங்குவோம்.

நவீன விவசாயத்திற்குள் உள்வாங்குவோம். ஏற்றுமதியை ஊக்குவிப்போம். சுற்றுலாவை ஊக்குவிப்போம். புதிய முதலீடுகளை கொண்டுவர தனியொரு வேலைத்திட்டம் உள்ளது.

கேரகலவில் முதலீட்டு வலயத்தின் 3 ஆவது வலயம் அமைக்கப்படும். அதனால் பெருமளவானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கம்பஹாவை நானே அபிவிருத்தி செய்தேன்.

சீனாவிற்கு தூரியான் ஏற்றுமதி செய்ய துரியான் செய்கைகளை புதிதாக அமைப்போம். அதேபோல் சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது முதலீட்டு வலயமும் கிடைக்காது என ரணில் விக்ரமசிங்க கூறியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here