எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது என  அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(02.09) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி   தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சமத்துவக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தமிழ் மக்களினதும் இலங்கைத் தீவினதும் எதிர்கால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென சமத்துவக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன் எமது மக்கள், எமது ஆதரவாளர்கள், எமது சூழலில் இயங்கும் பல்வேறு செயற்பாட்டு அமைப்புகள், ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்கள்  ஆகிய தரப்புகளோடு கலந்தாய்வுகளைச் செய்திருந்தது, அத்துடன், வரலாற்று அவதானிப்பு, சமகால நிலவரம், எதிர்காலப் பயணம் ஆகியவற்றைக்குறித்தும் ஆராய்ந்தது.

இதன்படி – இனரீதியாக ஒடுக்குதலுக்குள்ளாகும் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமையை அங்கீகரித்து, அதற்கான செயலாக்கப்பொறிமுறையை அமுலாக்கம் செய்யக்கூடிய உத்தரவாதம். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் போராளிகளுக்கும்  நலத்திட்டங்களையும் அவர்களுடைய மேம்பாட்டையும் முன்னிலைப்படுத்துவது.வடக்குக் கிழக்கு மாகாணங்களை துரித கதியில் மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளைச் செய்வது.

பல்லினத்தன்மை, பன்மைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் சமத்துவத்தைப்பேணக் கூடியவாறான அதிகாரங்களை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பை உருவாக்குவது. ஊழலை ஒழிப்பது,நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது,புலம்பெயர் மக்களின் அரசியல் நிதி மற்றும் முதலீட்டுப் பங்களிப்புகளுக்கான இடத்தை அளிப்பது,அரசியற் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவது,நிலஉரித்துக்கான செயலாக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது, போன்றவற்றில் சாதகமான சூழலை அளிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது என கட்சி முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து பிரதான வேட்பாளர்களோடு பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அவற்றில் எமக்கு ஓரளவு திருப்தியளிக்கக் கூடியவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேதாசவின்  உத்தரவாதங்களே அமைந்தன.

அவருடைய உத்தரவாதங்களுக்கு அப்பால் இலங்கைத்தீவிலுள்ள தமிழ்பேசும் சமூகத்தினராகிய மலையகம் மற்றும் முஸ்லிம் தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஆதரித்து நிற்கின்றனர். இவ்வாறு எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ்பேசும் தேசியத் தரப்புகள் ஒன்றிணைந்து நிற்பதன் மூலம் எமது நீதிக்கான குரலைப் பலப்படுத்த முடியும். அத்துடன் ஒரு வலுவான தரப்பாக அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
எமது மக்களுடைய கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் செயலாக்கம் செய்யவும் உதவும் எனச் சமத்துவக் கட்சி கருதுகிறது.

தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் சமாந்தரமானவை என்பதுடன் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப்பார்க்க
முடியாதவையாகவும் உள்ளன. இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகும்போதெல்லாம் தமிழ்பேசும் மக்களுக்கு இரட்டை நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே வரலாற்று அனுபவமாகும். ஆகவே எமது அரசியல் தீர்மானத்தையும் செயற்பாடுகளையும் அதற்கேற்ற விதத்தில் மேற்கொள்ள வேண்டியது மக்களுடைய பங்கேற்பை முழுமையாகக் கொண்ட அரசியற் கட்சி என்ற வகையில் சமத்துவக் கட்சியின் கடப்பாடாகிறது. அத்துடன் தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்பினருடன் அரசியற் கூட்டைக் கொண்டுள்ள ஒரே வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நிற்பது தமிழ் பேசும் சமூகத்தினருக்கு ஒப்பீட்டளவிலான அரசியற் பலத்தையும் சுதந்திரத்தன்மையையும்  அளிக்கும் என நம்புகிறோம். எமது இந்த நிலைப்பாட்டினை உணர்ந்து எமது மக்கள் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு அளிக்க வேண்டும் எனச் சமத்துவக் கட்சி கோருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here