உத்தியோகபூர்வ பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் ஒருவருட காலம் எஞ்சியிருக்கின்ற நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால் குறைந்தது இரு மாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், கலைக்கும் தினத்திலிருந்து குறைந்தபட்சம் 66 நாட்களில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் என்றில்லை, எப்போது கலைத்தாலும் 66 நாட்களில் தேர்தல் நடத்தப்படும்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் இடம்பெறவேண்டும். அதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாக இருந்தால் இந்த குறுகிய நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.







