சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்குதல், அவசியமான முடிவுகளை எடுப்பதற்கான அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை வெற்றிகரமாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து அரச மற்றும் தனியார் துறையினருடன் எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.







