இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால், பொதுமக்களுக்கு மின்வெட்டு உள்ளிட்ட எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த ஒன்றரை மாதங்களாக பராமரிப்பு பணிகளில் இருந்த களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், சில நாள்களில் மீண்டும் மின்சார உற்பத்தியில் இணையவுள்ளதாகவும் இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.








