இலங்கை பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொதுமக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக கடந்த புதன்கிழமை (9) தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வை பல்கலைக்கழக குழுவினர், பொதுமக்கள் களரியில் அமர்ந்து பார்வையிட்டதுடன், சட்டவாக்க நடைமுறை தொடர்பில் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியின் மூலம் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம், சட்டவாக்க நடைமுறைகள் மற்றும் பணிகள், குழு நடைமுறைகள் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் சட்டமூல வரைபு நடைமுறை தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரின் ஆலோசனையின் கீழ், சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேராவின் வழிகாட்டலில் நடைபெற்றது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே ஆகியோரும் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்ச்சியை பாராளுமன்றத்தின் அதிகாரிகளான எம்.எஸ்.எம். ஷஹீட், யஸ்ரி மொஹமட் மற்றும் பியசிறி அமரசிங்க ஆகியோர் நடத்தினர்.









