பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (8) காலை 7:40 மணிக்கு, ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் ஜெனரல் சாண்டோஸ் நகரில் 3 மாடிகளைக் கொண்ட ஜொலிபீ எனும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதேவேளை 3 மீட்டர் வரையிலான கடல் அலைகள் பிலிப்பைன்ஸைத் தாக்கக்கூடும் எனவும் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் 1 மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும் பொருட்களை விட உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது என்றும் அந்நாட்டு ஜனாதிபதி மார்கோஸ், அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் அனர்த்தத்தினால் மின்டானோவில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டதோடு 9 கடலோர மாகாணங்களில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் ஜப்பான், இந்தோனேசியா, தாய்வான் ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வினால் இதுவரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் பல அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.








