ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (28) அன்று வெளியிட்டார்.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் நாட்டில் பொது அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், எந்தவொரு அரச நிறுவனமும், அரசாங்கத் திணைக்களம், மாகாண சபை அமைப்பு, கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பதன் மூலம், வர்த்தமானி அறிவிப்பை மீண்டும் நீடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மின்சார விநியோகம், பெற்றோலிய உற்பத்தி, எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம், சுகாதாரம் தொடர்பான சகல சேவைகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.







