பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பமுனுகம பொலிஸாரால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 20 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
பின்னர், காயமடைந்த இரு இளைஞர்களுக்கும் நீதி கோரி பிரதேசவாசிகள் சிலர் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (24.10.2024) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.








