அரச வங்கியான மக்கள் வங்கி, பணப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தை மாற்றி வழங்கிய சந்தர்ப்பங்களில் அதிகப் பணம் செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தவறு மே 2023 முதல் மார்ச் 2026 வரை, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
இதன் காரணமாக 656 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வங்கி மதிப்பிட்டுள்ளது.
குறித்த இழப்பு ஏற்கனவே வங்கியின் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வேறு எந்த நிதிப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
மக்கள் வங்கியானது குறித்த வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை மீட்க தொடங்கியுள்ளது என்றும் மேலும் சில நிதி ஏற்கனவே திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது வழக்கமான செயல்பாடுகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வைப்புத்தொகைகள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள வங்கி அதிகாரிகள், சுமார் 3.8 டிரில்லியன் சொத்து மதிப்புடன் இயங்கும் நிலையில் இந்த செயற்பாடு வங்கியின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையைப் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளனர்.








