சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இடம்பெறும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

”குறைந்த தரத்திலான சோளங்களை பெற்று 180, 190 ரூபா செலவில் எத்தனோல் ஒரு போத்தல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எத்தனோல் ஊடாக குறைந்த தரத்தில் உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தைதான் 3000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர்.

இதனை வாங்கி அருந்த முடியாதவர்கள் சட்டவிரோத மதுப்பானங்களை அருந்துகின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படுகிறது. பெலவத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் சீனி உற்பத்தியின் பின்னர் எஞ்சும் திரவியம் ஊடாக தரமான மதுபானத்தை உற்பத்தி செய்ய முடியும்.

குறைந்த விலையில் மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். மக்களை மது அருந்த அரசாங்கம் ஊக்கப்படுத்துவது அல்ல இதன் நோக்கம். மது அருந்துபவர்கள் மற்றும் சட்டவிரோத மது அருத்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அவசியம்.

அதேபோன்று மக்கள் உள்நாட்டு கரிம சீனியை கொள்வனவு செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் சீனிகளின் தரம் தொடர்பில் எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. வெள்ளைநிற சீனிகளில் எவ்வாறான இரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்ற என்பது பற்றி தெரியாது. இவை தொடர்பில் ஆய்வு செய்ய உத்தரிவிட்டுள்ளோம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here