மருந்து இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் முறைகேடுகள் குறித்து குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த, ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை (01.07) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான சம்பவத்தில் தமக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை, தம்மை விளக்கமறியலில் வைப்பதற்கு மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று (27.06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் சட்ட மா அதிபரின் சார்பில் நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் விடயங்களை முன் வைத்திருந்தார். அதனையடுத்து முன்னாள் அமைச்சரின் மேற்படி ரிட் மனுவை, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








