மலையக தொடருந்து  பாதையில் எல்ல செல்லும் தொடருந்துகளுக்கான  பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டதனால், பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (15)  கண்டியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த பயணச்சீட்டு  மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இணையதளத்தின் ஊடாக அனைத்து பயணச்சீட்டுக்களையும்  வாங்கும் குழுக்கள், 2,000 ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகளை வெளிநாட்டவருக்கு  16,௦௦௦ ரூபாவுக்கு விற்பனை செய்வதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல தொடருந்து  நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தொடருந்து திணைக்களத்தின் ஊடாக தொடர்புடைய திகதிக்கு செல்லுபடியாகும் இணையவழி பயணச்சீட்டுகளை  ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் வெளியிடுவதாகவும், அவை வெளியிடப்பட்டு 42 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த விடயம்  தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கையில், முறைப்பாட்டை வழங்கும் நபர் சட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here