மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் கால எல்லை பற்றி எனக்கு உறுதியாகக் கூற முடியாது. அதற்குரிய சட்டதிருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் என்றார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “அந்தச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமும் மறுசீரமைக்கப்படும்” என்றார்.







