சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையிலான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்தது.

குறித்த வினாத்தாளிலிருந்த சில கேள்விகள், அண்மையில் நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளிலிருந்த சில கேள்விகளுக்கு இணையாகவுள்ளதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்தது.

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில், விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணை நிறைவில் உரிய வினாத்தாள் கசிந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் பரீட்சையை நடத்தத் தயங்கப் போவதில்லை எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here