யாழ் – கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு(01) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் பாதசாரிகள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 56 வயதான பாதசாரி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








