வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக திங்கட்கிழமை (07/04/2025) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதன் ஊடாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி மற்றும் வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் முயற்சியினால் முதற்கட்ட பேச்சுக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதி பலத்தினை பெற்று கொள்வது தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், பல்கலைக்கழகத்தின் துறை தலைவர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.








