எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இலங்கை தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கின் அறிக்கை நேற்று (22.08) வெளியானது.

இந்த அறிக்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டபின் தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையைச் சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, 2023ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்ட மூலங்கள் பாதுகாப்புப் படைகளுக்குப் பல அதிகாரங்களை வழங்கியுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு விரிவுபடுத்தியுள்ளது.

அரசாங்கம் அதன் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்பன தொடர்பாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மையாக்கப்படாத அறிக்கை வெளியான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பதிலளிப்பின் அடிப்படையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here