இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம்.
குறிப்பாக, இஞ்சி பயிருக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ. 2 இலட்சம் வரையிலும், மஞ்சள் பயிருக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ. 7 இலட்சம் வரையிலும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
காட்டு யானை தாக்கத்தால் அதிக ஆபத்து உள்ள மாவட்டங்களான பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் பயிரிடும் விவசாயிகளுக்கே இந்த சலுகை வழங்கப்படும் எனவும், இந்த முயற்சி மூலம் விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்பு வலுப்பெறும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.








